Friday, July 24, 2009

தமிழீழத்தை பாதுகாக்க நாம் தொடர்ந்து போராடுவோம் – வைகோ


vaiko

இலங்கை தமிழரை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கை அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீள் குடியமர்த்த வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உலக வரலாற்றில் இதுபோன்ற ஓர் இனப்படுகொலை நடந்ததில்லை. ஆனால், இந்த படுகொலை நாம் வாழும் காலத்திலேயே நடந்துள்ளது.

இலங்கை தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசு ஆயுதம் கொடுத்தது. பணம் கொடுத்தது. இந்திய தளபதிகளே இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதனால் தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். இதன் விளைவாகத்தான் தமிழக சட்டமன்றத்தில் கட்சி பாகுபடின்றி 234 எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலுடன் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இலங்கை அரசு இந்த தீர்மானத்தை குப்பைத்தொட்டியில் போட்டது. அடுத்த 2வது நாளே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, போர் தொடரும் என கொக்கரித்துவிட்டு சென்றார் இலங்கை அதிபர் ராஜபக்சே. ஆனால், தீர்மானம் போட்ட முதல்வர் கருணாநிதி அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்றும் நாடகமாடி கொண்டிருக்கிறார். இந்திய அரசும் இதுவரை போர் நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தவில்லை.

இலங்கை அகதிகள் முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஓர் சிறைச்சாலையில் இருக்கும் அடிப்படை உரிமைகள்கூட அந்த முகாம்களில் இல்லை.

இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பக்கூடாது. இலங்கை ஒருமைப்பாட்டை காப்பாற்ற போவதாக கூறி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கக் கூடாது.

இலங்கைக்கு இந்திய ராணுவம் இன்னும் உதவிகள் செய்தால், அங்கு தமிழர்கள் தனி தேசம் அமைக்க எல்லா உதவிகளையும் நாங்கள் செய்வோம். இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் நாங்கள் போராடுவோம் என்றார்.

No comments:

Post a Comment